அதிபர் சேவை: தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்

புதிய இலங்கை அதிபர் சேவை யாப்பு விதிகளுக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் தரம் 3 ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. 

இதற்காக புதிய அதிபர்களை கல்வி கட்டமைப்பிற்குள் விரைவாக உள்வாங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதற்கமைவாக நேர்முகப்பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டளவில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ள தரம் 3 அதிபர்களுக்கான அதிபர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 1918 ஆகும். 

இதற்கமைவாக இந்த நேர்முகப்பரீட்சை ஜுலை 29 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. 

அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள் மத்தியில் இருந்து வெற்றிடங்களின் எண்ணிக்கையை போன்று இரண்டு மடங்கினர் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படவுள்ளனர். 

கல்வியமைச்சினால் அதிபர் சேவை தரம் 3 ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்த 2019 பெப்ரவரி 10 திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 3881 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் 360 தமிழ் பரீட்சார்த்திகளும் 155 முஸ்லிம் பரீட்சார்த்திகளும் மீதி 3366 பேர் சிங்களப்பரீட்சார்த்திகளுமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் 9.27 வீதமும் முஸ்லிம்கள் 3.99 வீதமும் சிங்களவர்கள் 86.72 வீதமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். 

இதற்கான கடிதங்கள் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமாக நேர்முக பரீட்சைக்காக அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் கல்வி அமைச்சின் இணையத்தளமானwww.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும். 

நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் நேரம் தொடர்பான விடயங்கள் நாளைய தினம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts