அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் 14 நிமிடங்களுக்குள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அனர்த்தத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு.

அனர்த்தம் ஒன்று நாட்டிலோ அல்லது சமுத்திரத்திரத்திலோ  ஏற்பட்டால் அனர்த்தத்தை 14 நிமிடங்களுக்குள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அனர்த்தத்தை அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் உடனுக்குடன் தெரிவித்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும்,அமைச்சின் மேலதிக செயலாளருமான கலாநிதி எஸ்.அமலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை(6.10.2018) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும்,மேலதிக செயலாளருமான எஸ்.அமலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில் :-அனர்த்தங்கள் இன்று இலகுவாக நாட்டிலோ அல்லாது சமுத்திரங்களிலோ ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்தனோசியாவில் பூகம்பமோ அல்லது சுனாமி ஏற்பட்டால் அவ்வனர்த்தம் ஏற்பட்டு 2 மணித்தியாலங்கள் 9 நிமிடங்களுக்கு பின்னர்தான் இலங்கையைத் தாக்கும் என்பது உண்மையாகும்.ஆனால் அவ்வனர்த்தம் சம்பந்தமாக செய்தி உடனுக்குடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு உடனே தென்படும்.அதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அனர்த்தமோ அல்லது சுனாமி,சூறாவளி சம்பந்தப்பட்ட செய்தியை நாங்கள் 14 நிமிடங்களுக்குள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நாற்பதினாயிரம் பொதுமக்களின்  உயிர்களை பாதுகாக்க முடியும்.

சுமத்திரா தீவில் கடந்த 2004ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவு ஏற்பட்ட சுனாமி காரணமாக இலங்கையில் அதிகமானவர்கள் மரணித்துள்ளார்கள்.எதிர்வரும் காலங்களில் 9.6 ரிக்டர் அளவு ஏற்பட்டால் சுமித்திரா தீவில் ஏற்படுமாயின் மட்டக்களப்பு மாவட்டமும்,இந்தியாவும் ஒன்றாகும்.சுனாமி அனர்த்தம் சம்பந்தமாக இன்றைய மாணவர்களுக்கு போதியளவு தெளிவில்லாமல் இருக்கின்றார்கள்.

எமது அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 400 பவுசர்கள் குடிநீர் வழங்குவதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்குள் நாடளாவியரீதியில் உள்ள அரசாங்க அதிபர் அலுவலகங்களுக்கு வழங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வரட்சிக்கு 91 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க 750 மில்லியன் ரூபா அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி வழங்கியுள்ளது.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்போது காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய நம்பிக்கை நிதியத்தில் காப்புறுதி செய்தவராயின் அவர் அனர்த்தத்தால் பாதிக்கப்படுவதாயின்  வீடு கட்டுவதற்காக 2.5 மில்லியன் ரூபாவும்,வியாபாரத்துக்கு 2.5மில்லியன் ரூபாவும்,உயிரிழப்பராயின் 1.0மில்லியன் ரூபாவும் வழங்கப்படுகின்றது.

தற்போது விசித்திரமான அனர்த்தம் நாட்டில் ஏற்படுகின்றது.திடீரென சுழல்காற்று அடித்து ஓய்வடைகின்றது.இதனால் வீடுகளின் கூரையை சுழல்காற்று பல கிலோமீற்றர் தூக்கி வீசுகின்றது.இதனால் கூடுதலானா வீடுகளின் கூரை சேதமடைந்து நாட்டில் அனர்த்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுழல்காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 10,000 ரூபா உடனே வழங்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் 12 பாரிய அனர்த்தங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.அனர்த்தம் சம்பந்தமாக தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.வெள்ளம்,வரட்சி,சுனாமி, பூகம்பம் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை பாதுகாப்பதில் வினைத்திறனுடன் செயற்படும் என்றார்.

Related posts