அனைத்து சமயங்களும் நல்லவனவற்றையே போதிக்கின்றன: வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம்!

(சிரேஷ்ட ஊடகவியலாளர் சகா) 

உலகில் தோன்றிய அனைத்து சமயங்களும் மனிதனை வாழ்வாங்குவாழ்வதற்காக நல்லனவற்றையே போதித்துள்ளன. அதன்படி வாழ்ந்தால் எந்தப்பிரச்சினையும் எழப்போவதில்லை.
 
இவ்வாறு சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையின் சமாதானப் பெருநாள்  ஒன்றுகூடலில் உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தெரிவித்தார்.
 
இப்பெருநாள் ஒன்றுகூடலும் பெருவிருந்தும் நேற்று சம்மாந்துறைவலய சமாதானக்கல்வி இணைப்பாளர் அச்சிமொகமட்டின் தென்னந்தோப்பில் இடம்பெற்றது.
 
அங்கு மேலும் அவர் உரையாற்றியவதாவது:
மூவின உத்தியோகத்தர்களையும்கொண்ட எமது சம்மாந்துறை வலயத்தில் இனநல்லிணக்கசெயற்பாடுகள் காலாகாலமாக செயற்படுத்தப்பட்டுவருவதை அனைவரும் அறிவார்கள். இங்கு எந்தவிதமான இனமத வேறுபாடுகளும் எந்தச்சந்தர்ப்பத்திலும் காட்டப்படுவதில்லைஊழியர்களும் அப்படியே பழகுவார்கள்.
 
புன்னகையுடன் சேவையாற்றுங்கள் என்பது எமது நோக்கு. வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் மக்களுக்கு புன்னகையுடன் சேவையாற்றுகின்றபோது திருப்தி ஏற்படுகின்றது. 
இதற்காக உழைத்த அனைவரையும் நன்றியோடு பார்க்கிறேன் என்றார்.
 
சிறப்புரையாற்றிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கூறியதாவது:
 
சமயங்கள் காட்டிய நெறிமுறைகளைப்பின்பற்றுகின்றபோது இன்றைய சமகால இனவன்மம் இனமுரண்பாடு நாட்டில் எழுந்திருக்க நியாயமில்லைஎனவே நாம் சமயத்தை சரியாகப் பின்பற்றவில்லையென்பதே கருத்து.
 
இஸ்லாத்தின் கட்டாயமாக்கப்பட்ட கடமைகளாக கலிபா தொழுகை ஸக்காத்  நோன்பு ஹஜ் உள்ளன. இவற்றுள் இப்பெருநாள் நிகழ்வை இன்று அனைவரும் குறிப்பாக மூவினஉத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இணைந்து இந்த மனோரம்மியமான காலையில் செய்வதென்பது பாராட்டுக்குரியது.
உலகில் போதுமென்று சொல்வது உணவை மாத்திரமே.ஒரு கட்டத்திற்கு மேல் உண்ணமுடியாது. போதும் என்பார்கள். ஆனால் ஏனைய அனைத்தையும் வேண்டும் வேண்டும் போதாது என்று மேலும் மேலும் சேர்ப்பார்கள். அது இயற்கை. என்றார்.
 
சம்மாந்துறைவலய கல்விசார் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆசிரியஆலோசகர் இசட்.எம்.மன்சூர் ஊழியர் எம்.நசார் ஆகியோர் இனிமையான பாடலைப்பாடி அசத்தினார்கள்
 

Related posts