அம்பாறை தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறது. கவீந்திரன் கோடீஸ்வரன்

(எஸ்.குமணன்)
அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என இன்று இடம்பெற்ற ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டிட திறப்புவிழா நிகழ்வில் தெரிவித்தார்.
 
“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளின்கீழ் கல்வி அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட நாவிதன்வெளி 15ம் கிராம் கமு/சது/விவேகானந்த மகா வித்தியாலயத்தின்  ஆரம்ப கற்றல் வள நிலையத்திற்கான கட்டிடத்தின் திறப்புவிழா நேற்றுகாலை 11:30 மணியளவில் அதிபர் எஸ் .சாமித்தம்பி தலைமையில் நடைபெற்றன.
 
திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
 
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்…… அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது .
 
அப்படி ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கும் சிக்கல் ஏற்படுமாயின் அம்பாறை தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக மாறும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
 
காணிவிடையங்களாக இருக்கலாம் , கல்வி விடையங்களாக இருக்கலாம்,பொருளாதார விடையங்களாயினும், மழுங்கடிக்கப்பட்டு தமிழர்கள் நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படும்.
 
ஆகவே என்றும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ,பாதுகாக்கின்ற கட்சியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருந்து வருகிறது.
 
வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுமாயின் தமிழர்கள் பொருளாதார ,கல்வி ,காணி விடையத்தில் பலவீனப்படுத்தப்படுவார்கள்.இதனால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும் தமிழர்கள் பலவீனப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
 
 
இந்த நிகழ்விற்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் மாகாணசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமாகிய தவராசா கலையரசன், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர்எம்.எஸ்.எஸ்.நஜீம், ஆசிரியர்கள், மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழுவின், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts