அரச பதவி வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் ..! அமைச்சர் ஹிஸ்புல்லா

மாகாண மட்டத்திலும் மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு, வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க நடவடிக்கை வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாவடிவேம்பு மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றுகையிலேயே, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின வேண்டுகோளாக வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். கட்சி பேதங்களுக்கு அப்பால் அவர்களது தரங்களை மட்டும் அடிப்படையாக வைத்தே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் சிறுபான்மை சமூகம் ஒதுங்கியிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்ற பின்னர் அந்நிலை மாறியுள்ளது.

இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இனமக்களுக்குமான ஒரு கட்சியாக, ஜனாதிபதி இக்கட்சியினை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் தினத்தை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தவும் தீர்மானித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகைத்தந்த அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் புரிந்து கொள்வதற்கு சிறந்த வாய்ப்பும் இதன்மூலம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related posts