ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை.வடகிழக்கை கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியுள்ளது.இதற்கு இனம்,மதம்,மொழி கடந்து ஒற்றுமையுடனும்,அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால்தான் வடகிழக்கை கட்டியெழுப்ப முடியும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள வறிய குடும்பங்களை வாழ்வாதாரத்துக்கு ஊக்குவித்து பொருளாதரத்தில் முன்னேற்றும் செயற்றிட்ட நிகழ்வு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(17.6.2018) நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:- கடந்த 2015 ஜனவரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் தேவைகளை படிப்படியாக நிவர்த்தி செய்துவருகின்றோம்.நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கை கட்டியெழுப்புவதில் கவனமாக இருந்துகொண்டு பயணிக்கின்றது. வடகிழக்கை மட்டும் கட்டியெழுப்பவில்லை வடகிழக்கில் உள்ள பொதுமக்களின் தேவைகள்,வசதிவாய்ப்புக்கள்,பொருளாதாரம்,வைத்தியதேவைகள்,சுகாதாரப்பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை தெளிவாக ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எண்ணத்தில் பயணிக்கின்றது.ஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது.கடந்த மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும்,வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் 22000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பாரிய நிதிகளை ஒதுக்கி வடகிழக்கை கட்டியெழுப்புகின்றோம்.

வடகிழக்கை அபிவிருத்தி செய்வதன்மூலம் தான் இப்பிரதேசத்தை சேர்ந்த படித்த இளைஞர்,யுவதிகளை தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகளையும்,குறைபாடுகளையும், மக்களின் பிரச்சனைகளையும் உடனுக்குடன் என்னோடு தெரியப்படுத்துங்கள் அதனை நான் தங்குதடையின்றி நிறைவேற்றித் தருவேன்.வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை மிகவிரைவில் தீர்த்து வைப்பேன்.தொடர்ச்சியாக சிறுபான்மையின பொதுமக்கள் நல்லாட்சிக்கு ஒத்துழையுங்கள்.எங்களோடு இணைந்து நல்லாட்சியை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.நாங்கள் நீங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும்,அர்ப்பணிப்பான சேவைக்கும்  பல மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செய்துகாட்டுவோம் எனத் தெரிவித்தார்.

Related posts