இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது

இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்
 
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று (11) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்ட போதான கலந்திரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன், உயர்ஸ்தானிகர் அலுவலக அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் மற்றும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அலுவலர் சுமுது ஜெயசிங்க ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.
 
மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரை, மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர்.
 
இச்சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு மத்தியரசிடமிருந்து கிடைக்கப் பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 
மத்திய அரசானது மாகாண சபை என்கின்ற அலகினை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு அதிகார பகிந்தளிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மாநகர முதல்வர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன் மாநகர சபையினால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு நகர செயற்றிட்டம் தொடர்பான தெளிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
 
குறித்த விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
 
மேற்படிக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.    

Related posts