உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக தடை

ஸ்ரீலங்காவில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படுகின்ற பகிரங்க கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கு, உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாட்டில் பரவவிடாது கட்டுப்படுத்தும் வகையில், 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுகின்ற நபர்களை, பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொரோனா வைரஸ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொற்றுநோயாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும், தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்புதல் அல்லது பகிர்ந்து கொள்ளவோ வேண்டாமென இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி இவ்விடயம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் பதில் பொலிஸ்மா அதிபரின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் கைது செய்யப்படும் சந்தேநபருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படாது எனவும் அவரை விளக்கமறியலில் வைக்க முடியும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சட்டத்தின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் அதிகாரம் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts