எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர் – கம்பன் விழாவில் மட்டு முதல்வர் சரவணபவன்

முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும், நாகரும். எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் நிகழ்வுகள் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்விழவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (03.02.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தலைமையினை ஏற்று உரையாற்றிய போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்.

தமிழ் மன்னர்களான மூத்தசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் . இராஜராஜ சோழனும், பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள். இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர்நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சி செய்த, ஒரு சிவபக்தனான இராவணனால் தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இராவணன் கோட்டை, இராவணன் குன்று, சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான குன்று இராவணின் கோட்டையாக இருந்ததுள்ளது. இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம்.

ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. அதுமட்டுமல்ல தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து விட்டு ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தும் விட்டார்கள்.

இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஆதாரங்கள் அழிக்கபட்டுவிட்டன.

எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் இராவணன் சிங்கள இனத்தவன் என்று சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே எங்களது உண்மையான வரலாற்றையும், எமது இலக்கியங்களையும் நாம் ஆவணமாக்க வேண்டும்.

அதிலும் இன்றைய நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் எங்களது வீர வரலாறுகளையும், இலக்கியவான்களின் அதி உச்ச படைப்புகளையும் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றினைய வேண்டும். இது எமது பூர்வீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கு பதிலாய் அமைவதோடு சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை விடயங்களிலும் சாதகத்தினை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். (நன்றி vttn)

 

Related posts