ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேலை இல்லை! -பா.அரியநேத்திரன்.மு.பா.உ,

(சா.நடனசபேசன்)
சஜீத்பிரமதாசாவையோ கோத்தபாயாவையோ ரணிலையோ அல்லது வேறு பேரினவாத கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரையோ தெரிவுசெய்வது தமிழ்தேசியகூட்டமைப்பின் வேலையில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 
 
அண்மையில் ஐ.தே.கட்சி தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கா அமைச்சர் சஹீத்பிரமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் சம்மத்த்தை பெறுமாறு சஜீத்திடம் ரணில் கோரியதாக வெளிவந்த கருத்து தொடர்பாக ஊடகவியாளர் பா.அரியநேத்திரனிடன் கேட்ட போது அவர் மேலும் கூறியதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
 
தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் எந்த வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரை எமது கட்சி முடிவுகளை அறிவிக்கவில்லை இந்த நிலையில் தற்போது மோட்டு சின்னத்தில் பொதுசனமுன்னணி கோத்தபாயாவும் மணிசின்னத்தில் ஜே.வி.பி அனுரகுமார திசநாயகாவும் பிரதானகட்சிகள் இரண்டும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த நிலையில் ஐ.தே.கட்சி வேட்பாளர் தெரிவில் முடிவெடுக்க முடியாத இழுபறி நிலை தோன்றியுள்ளது பிரதமர் ரணிலா,சபாநாயகர் கருவா,அமைச்சர் சஜீத்தா என்பது தொடர்பாக ஐ.தே.கட்சிக்குள் ஒருமித்த கருத்துக்கள் இன்றி திண்டாடுகின்றனர். 
 
இந்நிலையில் பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜீத்துக்கும் இடையிலான ஒரு பேச்சு வார்த்தை அண்மையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது அதன்பின் அங்கு கருத்துகூறுய பிரதமர் ரணில் அமைச்சர் சஜீத்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்மதம் பெறவேண்டும் என சஜீத்துக்கு ஆலோசனை வழங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது இது உண்மையாக இருந்தால் அப்படி பிரதமர் ரணில் கூறியியிருப்பின் அவரின் பஞ்சதந்திர கருத்தாகவே இதை கருத முடியும்.
சிங்கள பௌத்த கடும்போக்காளர்களிடம் சஜீத் பிரமதாசாவின் ஆதரவை குறைப்பதற்காக இவ்வாறு கூறினாரா என்ற ஐயம் ஏற்படுகிறது.
 
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜ.தே.கட்சி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டுமானால் அந்த கோரிக்கையை தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் கேட்கும் தார்மீக பொறுப்பு பிரதமர் ரணிலுக்கு மட்டுமே உண்டு அதை சஜீத்தை அனுப்பி தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் பேசுமாறு பணிப்பது ரணில் அவர்கள் அரசியல் முதிர்ச்சி அற்றவர் இல்லை இது வேண்டுமென்று புனையப்பட்ட கதையா என்ற சந்தேகமும் உண்டு அப்படி கூறியிருப்பின் பிரதமர் ரணிலின் தந்திர அரசியல் செயல்பாடாகவே கருதமுடியும்.
 
கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற அமைச்சர் சஜீத் தமிழ்தேசிய கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடும்போது தாம் ஜனாதிபதி வேட்பாளராக வரவுள்ள தாகவும் தம்மை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் எனவும் கேட்டிருந்தார் அதற்கு எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவான பதிலை வழங்கினர் “முதலில் வேட்பாளராக தெரிவாகுங்கள் அதன்பின் யாரை ஆதரிப்பது என எமது கட்சி முடிவெடுக்கும்” என கூறப்பட்டது.
இதன்போது சஜீத் நகைச்சுவையாக தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஐ.தே.கட்சியும் ஒன்றுதான் என்ற விதமாக கூறியதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன.
 
இந்நிலையில் ரணில் தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சம்மத்தை பெறுமாறு சஜீத்துக்கு ஆலோசனை வழங்கிய செய்தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்னுமொரு சந்தேகம் ஏற்படுகிறது யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பும்,ஐ.தே.கட்சியும் ஒன்று என சஜீத் தெரிவித்த கருத்தை பிரதமர் ரணில் விதண்டாவாதமாக புரிந்து கொண்டு “தமிழ்தேசியகூட்டமைப்பும் ஐ.தே.கட்சியும் ஒன்று என நீர்தானே கூறினீர் அப்படியானால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சம்மதத்தை முடிந்தால் பெறு” என ஒரு கேலிக்காக அப்படி கூறினாரோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.
எது எப்படியானாலும் கடந்த 2015, ஜனாதிபதி தேர்தலின் போது பல கட்சிகள் மத தலைவர்கள் சட்டதரணிகள் புத்திஜீவிகள் இராஜதந்திரகள் ஒன்றினைந்து வேட்பாளராக மைத்திரிபால சிறுசேனாவை ஆதரிக்க முடிவுகள் எடுத்தபோது தமிழ்தேசிய கூட்டமைப்பும் அவர்களுடன் இணைந்து மைத்திரிக்கு ஆதரவு வழங்கியது அதற்கான ஒரே காரணம் மகிந்த ராசபக்‌ஷ என்ற கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அன்றி வேறில்லை,
 
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு யாரை வேட்பாளர்களாக தெரியவேண்டும் என்று எந்த பேரினவாத கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்காது ஆனால் வேட்பாளர்கள் தெரிவாகி வேட்பு மனு தாக்கல் செய்யபட்ட பின்பு முக்கியமான வேட்பாளர்கள் எல்லோரிடமும் பேசி யாரை ஆதரிக்க கூடாது அதற்காக யாரை வெற்றிபெற வைக்கலாம் என்பதை பொறுத்து இறுதி தீர்மானத்துக்கு வருவார்கள்.
அதற்கு இடையில் தமது கட்சிக்கு பொருத்தமான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யாமல் ஐ.தே.கட்சி பந்தை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுவது ஆரோக்கியமான செயல்பாடாக அமையாது எனவும் மேலும் கூறினார்.

Related posts