கடல்நீர் எடுத்தலுடனும் கல்யாணக்கால் நடலுடனும் ஆரம்பித்த காரைதீவு கண்ணகையின் திருக்குளிர்ச்சிச்சடங்கு!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு   01.06.2020ஆம் திகதி திங்கள்  மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன்  ஆரம்பமாகியது.

கொரோனாதடுப்பு நடைமுறைக்கிணங்க மட்டுப்படுத்தப்பட்டளவில் நிருவாகத்தினர் முகக்கவசம் சமுகஇடைவெளியைப்பேணி இச்சடங்கினை மேற்கொண்டனர்.

பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இதனைக்கண்காணித்த வண்ணமிருந்தனர்.

தொடர்ந்து எட்டு நாட்கள் சடங்கு நடைபெற்று 09.06.2020ஆம் திகதி அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.
08.06.2020ஆம் திகதி  பி.ப.3.00மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.அதேவேளை 15.06.2020ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை இடம்பெறும்.

கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் யாவும் வழமைபோல் நடைபெறும். ஆனால்  தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் மற்றும் கற்பூரச்சட்டி ஏந்துதல் பொங்குதல் போன்ற நேர்த்திகளுக்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் ஆலயத்துள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

 

Related posts