கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையோர்- கோடீஸ்வரன் குற்றச்சாட்டு.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுடன்    தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் முட்டுக்கட்டையாக இருப்பதாக அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம்சாட்டினார்.

கல்முனை ஷைனிங் வியாட்டுக்கழகத்தின் 37ம் ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற மாபெரும்மென்பந்து போட்டியின் இறுப்போட்டி இன்று (19) மாலை 5:30 மணியளவில்  ஷைனிங் விளையாட்டு மைதானத்தில் தலைவர் குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்  ; 
இந்தப்பிரதேசத்தில் மிகப்பிரதான தேவைப்பாடுகள் உள்ளது அந்த தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யவேண்டிய கடமைப்பாடுகள் எமக்கு இருக்கின்றது. இதில்  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதே பிரதானமானது . இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் பலதரப்பட்ட முட்டுக்கட்டைகள், பலதரப்பட்ட இடர்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதில் தடையாக தேசிய தௌபீக் ஜமாத் உறுப்பினர்கள் கூட உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலைத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் அதனுடன் தொடர்புடைய தேசிய தௌபீக் ஜமாத் கூட எங்களது வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தக்கூடாது.  தமிழர்களுக்கு அவ்வுரிமை கிடைக்ககூடாது என்கின்ற விடயத்தில் அவர்களும் சேர்ந்து செயற்படுகிறார்கள்.
தற்கொலைத்தாக்குதல் நடைபெற முன்பே முகநூல் வாயிலாக அச்சுறுத்தல் விடப்பட்டிருந்தது .கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி  பிரதேசவாழ் மக்கள் பேரணி ஒன்றை  மேற்கொள்ளவிருந்த நிலையில் நடைபவனி மேற்கொள்பவர்கள் பல இழப்புக்களை சந்திப்பார்கள் வீடுதிரும்ப மாட்டார்கள் என்று தங்களின் கொடூர நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதனடிப்படையிலே நாங்கள் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும். எங்களது நியாமான கோரிக்கையான வடக்கு தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி பெறும் வரை போராட்ட வீரராக ஒவ்வொரு தமிழ் மகனும் இருக்க வேண்டும்.அதற்காக பல திட்டங்களை வகுத்துவருகின்றோம்.
அதனடிப்படையிலே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி பெற்றுத்தரும் வரை நிச்சயமாக நான் ஓயமாட்டேன்.
வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிதி மற்றும் காணி விடயங்களில் நிதி சம்பந்தப்பட்ட விடையங்களை மிக விரைவாக பெற்றுத்தருவதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அடுத்தகட்டமாக காணி சம்பந்தப்பட்ட விடையங்களை பெற்றுத்தருவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இங்கு வாழுகின்ற ஒவ்வொரு  தமிழர்களும் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.  இந்த சூழ்நிலையில் தமிழர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் கூடுதலாக கிருத்தவ தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். 
உண்மையாக தமிழ் கிருத்தவர்களுக்கு நடைபெறாமல் வேறு இனத்திற்கு நடைபெற்றிருந்தால் நாடே இரத்தக்களரியாக மாறியிருக்கும். அது பௌத்த இனமாக இருக்கலாம் ,முஸ்லிம் இனமாக இருக்கலாம் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் இந்த நாடு பாரிய உயிரிழப்புக்களை சந்தித்திருக்கும்.
நாங்கள் பொறுமையாக இருந்திருக்கின்றோம் அந்த பொறுமையை பெற்றிருக்கின்றோம். அந்தவகையிலே இவர்களைப்பாதுகாத்திருக்கின்றோம், மன்னிப்பை கடைப்பிடித்திருக்கின்றோம் விட்டுக்கொடுப்பு செய்திருக்கின்றோம் என்று கூறவேண்டும்.
தமிழர்கள்   30 வருட யுத்தத்தில் உண்மையாக பலதரப்பட்ட உயிரிழப்புக்கள்,உடமைகளை இழந்திருக்கின்றோம்.
எங்களுக்கு அரசியல் தீர்வு,வடகிழக்கு இணைந்திருந்தால் இப்படியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம். தமிழர்கள் ஒன்றாக செயற்பட வேண்டும் விஷேடமாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் அனைவரும் எங்களது கொள்கைக்க,விடுதலைக்காக, தேசியத்திற்காக பாடுபட வேண்டும் எனத்தெரிவித்தார். 
இந்த நிகழ்விற்கு கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ராஜேந்திரன் அவர்களும், ஆன்மீக அதிதிகளாக  கல்முனை ரண்முத்துகல விகாராதிபதி சங்கரத்தின தேரர் அவர்களும்,கல்முனை பரலோகவாசல் தேவாலத்தின் போதகர் எச்.கிருபைராஜா அவர்களும் இந் நிகழ்விற்கு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இறுதிப்போட்டிக்கு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகமும்,பெரியநீலாவணை வெஸ்ரன் விளையாட்டுக்கழகமும் தெரிவாகியிருந்தது.இதில் பாண்டிருப்பு காந்தி விளையாட்டுக்கழகம் வெற்றியினைப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts