களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சேர்ந்தசகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகளென அடையாளங் காணப்பட்ட சகோதரர்கள் இருவருக்கும், மரண தண்டனை தீர்ப்பு வழங்கி, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன், இன்று (30) தீர்ப்பளித்தார்.

சகோதரியின் கணவரைப் படுகொலை செய்தமை தொடர்பில் தொடர்ந்து நடைபெற்றுவந்த விசாரணையின் கீழ், சாட்சியங்களின் அடிப்படையில், இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் வயல் பகுதியில் 2005ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 29ஆம் திகதி, மயில்வாகனம் வடிவேல் என்பவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில், களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர்களான தெய்வநாயகம் மகேஸ்வரன், தெய்வநாயகம் மேகராசா ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இக்கைது இடம்பெற்று, வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலும், இருவரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும், மரண தண்டனைத் தீர்ப்பு வழங்குவதாகவும், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related posts