காரைதீவில் சிகைஅலங்கார நிலையங்களுக்கு இயங்கத்தடை.

காரைதீவு  பிரதேச செயலக கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 5வது கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன்  தலைமையில் நேற்று  நடைபெற்றது.

 
இந்நிகழ்வில்    பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் எம்.ஐ. றிஸ்னி ,சம்மாந்துறை பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எம்.அமீன்,  உதவி பிரதேச செயலாளர்  எஸ்.பார்த்திபன் , காரைதீவு இராணுவ பொறுப்பதிகாரி பிரதேச சபை செயலாளர்  மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு கருத்துரைத்தார்கள்.
 
இதன்போது covid 19 வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணும் முகமாக சலூன் கடை திறந்து முடி வெட்டுதல் மற்றும் வீடுகளுக்கு சென்று முடி வெட்டுதல் மறு அறிவித்தல் வரை முற்றாக தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வாறு மீறும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாளிகைக்காடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பதிவுசெய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வாடிகளுக்கு மாத்திரம் மொத்த வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதுடன் அவர்களுக்கான மீன்களை பதனிடும் ஐஸ் மற்றும் உப்பு போன்றவைகளை வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அனுமதி வழங்குவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related posts