கிழக்கு ஆளுநரின் அதிவிசேடவர்த்தமானிஅறிவிப்பில் மாற்றம் வேண்டும்! ஊடகமாநாட்டில் அம்.மாவட்ட தவிசாளர்கள் ஒன்றிணைந்து தெரிவிப்பு..

கிழக்குமாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கிழக்குமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அதிவிசேச வர்த்தமானி அறிவித்தலில் மாற்றம்செய்யவேண்டும்.
 
இவ்வாறு அம்பாறை மாவட்ட பிரதேசசபைத்தலைவர்கள் நடாத்திய ஊடகமாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
 
குறித்த ஊடகமாநாடு காரைதீவு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று(19)சனிக்கிழமை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
 
முன்னதாக அங்கு பிரதேசசபைத்தவிசாளர்களின் கலந்துரையாடல் ஒருமணிநேரம் இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இடம்பெற்றது.
 
அம்மாநாட்டில் தவிசாளர்களான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்(காரைதீவு) இராசையா வில்சன் கமலராஜன்(திருக்கோவில்)  தங்கையா கிரோஜாதரன்(ஆலையடிவேம்பு) ஆகியோர் விளக்கமளித்தனர்.
 
அங்கு தவிசாளர் கே.ஜெயசிறில் கூறியதாவது:
அரசாங்கம் எமது கிழக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித்திட்டங்களுக்கான நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. எனவே அதனை உடனடியாக வழங்கி மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்து உள்ளுர்அரசியலை வளர்தெடுக்க முன்வரவேண்டும்.
 
ஜனாதிபதி பட்டதாரிகளுக்கும் 1லட்சம் இளைஞர்யுவதிகளுக்கு வேலைவாயப்பு வழங்குவதுபோன்று எமது சபைகளில் பணியாற்றும் அமையஊழியர்களை நிரநதரமாக்கவேண்டும்.
 
கிழக்கு ஆளுநர் கடந்த யூலை மாதம் 13 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேசவர்த்தமானி அறிவித்தலில் நல்லபல வியடங்களுள்ளன.அதேவேளை எமது உரிமைகள் சலுகைகள் பல மறுக்கப்பட்டிருக்கின்றன.நாட்டில் வேறெந்த மாகாணங்களிலும் இந்த நடைமுறை இல்லை.எனவே அவரை வெகுவிரைவில் நாம் சந்தித்து கலந்துரையாடி அதில் சில மாற்றங்களை கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.
 
நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஜனாதிபதி முதல் பிரதமரும் கூறிவருகின்ற அதேவேளை உள்ளுராட்சி மன்றங்களிலும் 9மாகாணங்களிலும் ஒரே சட்டம் அமுலாகுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
 
எமது சபைகளில் போதுமான வாகனங்கள் இல்லாமையினால் திண்மக்கழிவகற்றல் தொடக்கம் பல செயற்பாடுகளுக்கு தடையாகவுள்ளது. எனவே வாகனங்கள் வழங்கவேண்டும். என்றார்.

Related posts