கோவில் வீதியில் கொட்டப்பட்ட விலங்கு கழிவுகளை அகற்றிய மாநகரசபை உறுப்பினர்-மக்கள் பாராட்டு

சட்டவிரோதமாக  கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்பட்ட   மாட்டு கழிவுகள்  கல்முனை மாநரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் தலையீட்டினால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
 
மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய சனிக்கிழமை(14) இரவு 9 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்று ஆராய்ந்துள்ளதுடன் மாநகர சபை உறுப்பினர்  கல்முனை மாநகர ஆணையாளரை தொடர்பு கொண்டு குறித்த இடத்தில் கொட்டப்பட்டிருந்த பெருந்தொகையான கழிவுகளை அகற்றி உதவியுள்ளார்.
 
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்
 
கல்முனை மாநகரிலுள்ள புனிதம் மிக்க கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எழும்பபுகள் ,மாட்டுத் தோல்கள் கொண்ட  கழிவுகளை கொண்டு வந்து கொட்டி  அமைதியாகக் காணப்படும்  கல்முனையின் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயலாகும்.ஆலயத்திற்கு பக்கதர்கள் அதிகமாக வருகை தரும் நாளில் வேண்டும் என்றே இப்பிரதேசம் துர்நாற்றம் வீசும் வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் எலும்புகள்,தோல்கள்,குடல்களை இப்பகுதியில் சட்டவிரோதமாக வீசியுள்ளனர்.
 
குறித்த ஆலயம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் இதற்கு முன்னரும் அடிக்கடி இவ்வாறு  விலங்குகளின் கழிவுகளும்,குப்பைகளும் ,வீசப்பட்டிருந்தன.  அத்துடன் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய சூழலிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது எனவே இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கடையே முறுகல் நிலைகளையே ஏற்படுத்தும்.இவ்வாறான செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் தீய சக்திகளை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
 
இச்செயற்பாட்டை  சிலர்  சுயலாப அரசியல் நோக்கம் கொண்ட இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர். இதே வேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.எமது மக்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.நாம் மாற்று இனத்தவர்களையோ  மதத்தவர்களையோ இம்சிப்பதால் கண்டபயன் எதுவுமில்லை. மாறாக ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு முட்டி மோதி இரத்த ஆறு ஓடுவதற்கே இத்தகைய செயல்கள் வழிசமைக்கும்.
 
எனவே இவ்வாறான ஈனச் செயல்களை எந்த சமுகத்தைச் சார்ந்தவர் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உச்ச பட்ச தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும்.தமிழ்  முஸ்லிம் மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் கல்முனையின் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கும் அதன் மூலம் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும் கங்கணம் கட்டியுள்ளவர்களுக்கு இடமளிக்காத வகையில் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் சமயத் தலைவர்கள் புத்தி ஜீவிகள்தொழிற்பட வேண்டுமென்று  குறிப்பிட்டார்.
 
மேலும் இரவு வேளை கறித்த விலங்கு கழிவுகளை அகற்ற அந்த இடத்திற்கு சென்ற மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எதுவித பாதுகாப்பு அங்கிகளையோ கையுறைகளையோ அணிந்திருக்கவில்லை என்பதுடன் தங்களுக்கு மாநகர சபையினர் அதற்காக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்தனர்.

Related posts