சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் திலகசிறி கல்முனை விஜயம்!

சமுர்த்தி அபிவிருத்தித்  திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி நேற்று கல்முனைக்கு விஜயம் செய்தார்.

அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாண்டிருப்பில் அமைந்துள்ள கல்முனை வடக்கு -மேற்கு சமுர்த்தி வங்கிக்கு  விஜயம் செய்தார்.

அவருடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வே.ஜெகதீசனும் வருகைதந்திருந்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முதல்தடவையாக கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையில் கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கியும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
 
இதனடிப்படையில் வங்கி ஊழியர்களை ஊக்கப்படுத்தும்வகையிலும் மேற்பார்வையிடும் வகையிலும் ஆணையாளரின் விஜயம் அமைந்திருந்ததுடன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வானொலிச்சேவையை வங்கியில் ஒலிபரப்புவதற்கான இலத்திரனியல் உபகரணம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்; வங்கியின் கணினிச்சேவையில் சிறப்பாக பங்களிப்பு செய்த தகவல் தொழில்நுட்ப பரிவு உத்தியோகத்தர் ரி.பவளேந்திரனும் பாராட்டப்பட்டார்.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் கே.இதயராஜா கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.தவசீலன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரி.தெய்வேந்திரன் மற்றும் சமுர்த்தி வங்கியின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.  

Related posts