சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதி கொடுத்துள்ள புதிய பதவி

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சர் ரிசாட் மற்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா இருவரினதும் பெயர்கள் பல்வேறு தரப்பிலும் அடிபட்டு வருகின்றன.

குறித்த இருவரினதும் பதவிகளை பறித்து கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

ரிசாட்டை பிரதமரும் ஹிஸ்புல்லாவை ஜனாதிபதியும் பாதுகாத்து வருகின்றனர் எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஒன்றை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றுக்குமான இணைப்புக் குழுத் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து கண்டறிந்து அவற்றை விரைவுபடுத்து வதற்கே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பதவி வழங்கப்பட்டதன் பின்னர் முதற்கட்ட நடவடிக்கையாக திருகோணமலை மாவட்ட இணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts