சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்!

சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்!

“பிலவ” வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்ச உணர்வு முழுமையாக நீங்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு மக்களை மிகுந்த அவதானத்துடனும், பொறுப்புனர்வுடனும் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலங்களில் அதிக சன நெரிசல் காணப்படுவதனால் அவ்வாறான இடங்களிற்கு செல்லும் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும், அது அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தாருக்கும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நன்மையளிக்கும் என்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பை மிக வினயமாக வேண்டப்படுவதாக அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே மக்கள் இவ் விசேட பண்டிகை காலங்களில் சனநெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு செல்வதை இயன்றளவு தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும், அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்வது சாலச் சிறந்ததாக அமையுமெனவும், அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும்  அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இம்முறையும் எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவது தான் கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.

Related posts