ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய திட்டம் வேடிக்கையானது: சி.சிறீதரன்

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய திட்டம் மிகவும் வேடிக்கையானது” எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.

எதிர்வரும் 18-ம் திகதி  ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ என்ற புதிய நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தனது மனையின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் ஏறியமை உலகத்தின் கவனத்தையீர்த்தது. இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கேட்டிருந்தது.  அதேபோல் பல மனிதநேய அமைப்புக்களும் கேட்டிருந்தன.

ஆனாலும் அதனைக் கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி, கிளிநொச்சியில் 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்ய கூடாது” எனத் தெரிவித்தார்.

Related posts