தடுப்புக்காவல் கட்டளையினை தளர்த்தி அஜந்தனை விடுதலை செய்யக் கோரி இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதம்…

கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கரையாக்கன்தீவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்காமல் உரிய கட்டளைகளை மீளப் பெற்று விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2018.11.30ம் திகதி வவுணதீவுப் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனுடன் தொடர்புபடுத்தி கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தடுப்புக் கட்டளை மூலம் கைது செய்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின் போது வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலைக்கும் அஜந்தனுக்கும் தொடர்புகள் இல்லை எனவும், அக்கொலையினைச் செய்தவர்கள் வேறு நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அறிகின்றேன்.

எனவே இத்தகவல்கள் சரியெனினல் சந்தேகத்தின் பெயரில் இத்தனை மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஜந்தன் என்பரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts