தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவிப்பு

தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும்  குடும்பங்களின் கண்ணீரில்  இணைந்து கொள்கின்றோம் என 
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய தாக்குதல் தொடர்பாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியீடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கும்போது:-
ஞாயிற்றுக்கிழமை(21)காலையில் இலங்கையெங்கும்  நடத்தப்பட்ட  தொடர் தாக்குதல்கள் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.அத்தோடு   கொழும்பு,நீர்கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு புனித தேவாலயங்களிலும், விடுதிகளிலும் பலிகொள்ளப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும்  சிரம் தாழ்த்திய அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.குறிப்பாக   தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும்  குடும்பங்களின் கண்ணீரில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

மானிட விழுமியங்களை தவிர்த்து சற்றேனும் கவலை கொள்ளாத,ஈவிரக்கமற்ற இத்தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை மட்டுமன்றி,நவீன உலகுக்கு  சவால் விடுக்கும் காட்டுமிராண்டித்தனமானவையுமாகும்.மேற்படி தாக்குதல்களில் இறந்தும்,காயப்பட்டும் பாவப்பட்ட  நிலையில் இருக்கும் அயலவர்களுக்கு  எம் தேசத்து குடிமக்கள் அனைவரும் ஆதரவாகவும்,ஆறுதலாகவும் தங்களால் முடிந்த உதவிகளை  செய்யுமாறும் அவர்களின் துயரங்களில் பங்கெடுக்குமாறும்   தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பாக மட்டக்களப்பு தேவாலய தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து குடும்பங்களுக்கும், தமிழ்  மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  தொண்டர்கள்  அனைவரும் தம்மாலான முழு உதவிகளையும்  வழங்க முன்வருமாறு  எமது தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான சந்திரகாந்தன்(பிள்ளையான்)விடேச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நேரத்தில்  எத்தகைய பயங்கரவாத செயல்களாலும்  இன,மத,அரசியல் முரண்பாடுகளை தீர்க்க முடியாது என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

30 வருட உள்நாட்டு யுத்த அழிவிலிருந்து மீண்டெழுந்து   கடந்த பத்து வருடமாக அமைதி காற்றை சுவாசித்து வந்த எம் தேசம் மீண்டும் ஒரு யுத்த பூமியாக மாற்றப்பட்டுவிடக்கூடாது.   எனவே இத்தாக்குதல் குறித்து எவ்வித வதந்திகளையோ, சந்தேகங்களையோ பரப்ப வேண்டாம் என்பதோடு சகலரும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும், இன,மத முரண்பாடுகளை தூண்டி விடும் எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும்  கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

Related posts