திருக்கோணேஸ்வரர் ஆலய சிவலிங்கம் உடைப்பால் பதற்றம் !

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்க சிலை, இனந்தெரியாதோரால் உடைத்து, மற்றுமோர் இடத்தில் போடப்பட்டுள்ளமையால், (01) காலை முதல் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இது தொடரபாக, ஆலய அன்னதான மடத்தின் அருகில் இன்று ஒன்றுகூடிய இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர், மீள அவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் வரை அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லமாட்டோம் என்றனர்.

இச்சம்பவம் தொடரபாகக் கருத்துத் தெரிவித்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்டர் சபை பிரதிநிதிகள், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான திருவுருவச் சிலை, நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவ்விடத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தை, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, வீதி அலங்காரம் செய்யும் குழுவினர், அன்னதான மடத்துக்கு முன்னால் வைத்திருந்தனர் எனத் தெரிவித்தனர்.

அந்தச் சிவலிங்கம், இனந்தெரியாதோரால் நேற்றிரவே (28) உடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை குறித்த இடத்தில் வைப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி, தொல்பொருள் திணைக்களத்தினரிடம் கடிதமொன்றை, ஆலய நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கோரியுள்ளனர் எனவும், அவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமையகத்துக்கு குறித்த கடிதத்தை, தொலைநகல் மூலமாக அனுப்பி, மக்கள் பிரதிநிதிகளும் ஆலய நிர்வாகிகளும் அனுமதிக்காக காத்திருக்கின்னறனர்.

இருப்பினும், எதிர்வரும் 10ஆம் திகதி வரை, சிவலிங்கத்தை அவ்விடத்தில் வைப்பதற்கு பேச்சளவில் தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கான எழுத்து மூல ஆவணத்தை எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை, மேற்படிச் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts