நீர்ப்பாசனத் திட்டங்கள்: வாகனேரி – உறுகாமத்தை பிரிப்பதற்கு பாரிய எதிர்ப்பு

மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தை, உறுகாம நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி, செங்கலடி நகரில் இன்று (07) பாரிய ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

வாகனேரித் திட்ட முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள 14 அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டம், பல வருடங்களாக உறுகாம  நீர்ப்பாசனத் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டத்திலிருந்து வாகனேரித் திட்டத்தைப் பிரிப்பதற்கு எந்தவொரு விவசாயிகளும் விரும்பவில்லையென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

எனினும், விவசாய அமைப்புகளிடம் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல், தான்தோன்றித்தனமாக வாகனேரித் திட்டத்தைப் பிரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இச்செயலைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில், மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

Related posts