பயங்கரவாத்தை தடுப்பதற்கு புதிய சட்டம்

தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை, இரத்துச் செய்துவிட்டு, பயங்கரவாத தடுப்புக்கென புதிய சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

அதனடிப்படையில், புதிய சட்டமூலம், நாடாளுமன்றத்தில் மிகவிரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் ​நேற்றுமுன்தினம் (11) கூடியது. இதன்போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகவே, திருத்தங்களுடன் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிகவிரைவில் வெளியிடப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, புதிய சட்டமூலத்தில், அத்தியாவசிய காரணங்கள் பல உள்ளடக்கப்படாமை தொடர்பில், அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கருத்துரைத்துள்ளனர். அதனையடுத்து, மேற்குறிப்பிட்ட நான்கு அமைச்சர்களுக்கிடையிலும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“மனித படுகொலைத் தொடர்பில் மரண தண்டனை விதிப்பதற்கு, தண்டனை கோவைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ளது. எனினும், புதிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில், வாழ்நாள் சிறைத்தண்டனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவையில் கருத்துரைத்துள்ளார்.

புதிய சட்டத்தில், பிரிவினைவாதத்துக்கு தண்டனை உள்ளடக்கப்படவில்லை என்றுத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அது பயங்கரமான தண்டனைக்குரியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதம் தொடர்பில், ஒருவர் வழங்குகின்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியாக எடுத்துக்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்யமுடியாதென, புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் விஜயதாஸ, இங்கிலாந்தில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில், ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியாக எடுத்துகொண்டு வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்

 

Related posts