பிரதேச சபை உப தலைவர் கொலை: ஒருவர் கைது

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான அசேல ரணசிங்க எனும் இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது சந்தேகநபர் காயமடைந்ததுடன், விபத்தில் காயமடைந்ததாக தெரிவித்து ஊருகஸ்மங்ஹந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதேவேளை, கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் கொல்லப்பட்ட பகுதியிலிருந்து சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிள், T56 ரக துப்பாக்கி ரவை மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை எல்பிட்டி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

காலி – ஊருகஸ்மங்ஹந்தி – கோரகீன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் ரணவீர உயிரிழந்தார்.

Related posts