பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம்

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது Ideonella sakaiensis என்ற புதிய பாக்டீரியா ஒன்று பெட் பாட்டில் தயாரிக்க பயன்படும் polyethylene terephthalate என்ற பிளாஸ்டிக்கை உண்டு வாழ்வதை கண்டு விஞ்ஞானிகள் பிரம்மித்தனர்.

பெட்வேஸ் என்ற நொதியே பிளாஸ்டிக்கை செரிக்க காரணமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அதன் வேதி அமைப்பில் விஞ்ஞானிகள் சிறு மாற்றம் செய்த போது நொதியில் பிளாஸ்டிக் செரிக்கும் திறன் வேகமெடுத்துள்ளது.

இது பற்றி பேசிய ஆராய்சியாளர்கள் சில அமினோ அமிலங்களை கலப்பதன் மூலம் நொதியின் செயல்பாடு குறையும் என்று தான் கணித்ததாகவும், ஆனால் நொதியின் பிளாஸ்டிக் செரிக்கும் திறன் மேலும் அதிகரித்ததை கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார். இதனை மேலும் மேம்படுத்த அடுத்த கட்ட முயற்சி தொடரும் என்றார்.

சிதைவதற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் பிளாஸ்டிக்கை இந்த நொதி ஆறே வாரங்களில் சிதைத்து விஞ்ஞானிகளை வியப்பில ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நொதியின் பிளாஸ்டிக் திறனை மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

ஆண்டிற்கு 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகளால் சிறிய கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி சுறா மீன், டால்பின் போன்ற பெரிய உயிரினங்களும் செத்து மடிகின்றன. இந்த சூழலில் பிளாஸ்டிக் என்னும் எமனை அழிக்க புதிய என்சைம் கண்டறியப்பட்டுள்ளது, பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான கதவுகளை திறக்க செய்துள்ளது.

Related posts