புதூர் பகுதியில் சுற்றிவளைப்பு

வவுனியா புதூர் பகுதியில் பொலிஸார் ஒருவரை சோதனையிட முயன்ற போது அவர் தப்பியோடிய நிலையில், அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்

வவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது அங்கு வந்த ஒருவரை மறித்து சேதனையிட முற்பட்ட போது, குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு அப்பகுதியில் இருந்து காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை தேடியும், காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வகையிலும் புதூர் முதல் கனகராயன்குளம் வரையுமான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடனும் சோதனைகள் இடம்பெறுகின்றது.

Related posts