‘போதைப்பொருள் பாவனையில் கிழக்கு மாகாணம் முன்னணி’

கல்வி, சுகாதாரத் துறைகளில், கிழக்கு மாகாணம் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் பாவனையில் முன்னணி வகிப்பதை வேதனையுடன் நோக்கவேண்டியுள்ளதாக, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.

போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு, தற்கால கல்விச் சமூகத்திடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டுக்கான சித்திரை உறுதி உரை நிகழ்வு, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையில்  இன்று (03) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர், இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுயில், எமது நாட்டில், மதுபான சாலைகள் மாவட்டங்கள் தோறும் சனத்தொகைக்கேற்பவே நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்படுவதுண்டு எனவும் அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் 60 மதுபானசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மதுபான சாலைகளுமே  சட்டரீதியில் இயங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 60 மதுபானசாலைகள் உள்ளனவெனவும் மதுபாவனையில் நுவரெலியா, யாழ்ப்பாணத்துக்கு அடுத்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக மாதாந்தம் சராசரியாக 360 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற அதேவேளை, இம்மாவட்டத்திலிருந்து மதுபானசாலைகள் மூலமாக அரசாங்கத்துக்கு மாதாந்தம் 400 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts