மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு படுதோல்வியை சந்திக்கும்.

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு படுதோல்வியை சந்திக்கும்.மட்டக்களப்பு மட்டுமல்ல வடகிழக்கிலும் நினைத்து பார்க்காத படுதோல்வியை தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு புகட்டுவார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் தமிழ்மக்களை சுயகௌரவத்துடன் வாழவைக்கனும் எனும் எண்ணம் துளியளவும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன வேட்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று(29)ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளிவிபரத்தரவுகள்  தெரியாத அரசியல்வாதிகளை மட்டக்களப்பு மக்கள் வாக்களித்து தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பது கவலையளிக்கின்றது.இவ்வாறான தவறுகளை தமிழ்மக்கள் இனியும் தவறு விடக்கூடாது.இப்போது தேர்தல் காலமாகும்.இத்தேர்தலுக்கு தமிழ்மக்களின் இல்லங்களை நாடிவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர்,ஆதரவாளர்கள் மீண்டும் இன்னும் 5 ஆண்டுகள் கடந்து மீண்டும் உங்களிடம் வாக்குச்சேகரிக்க வருவார்கள்.இதனை தமிழ்மக்கள் யதார்த்தமாக உணர்ந்து செயற்படவேண்டும்.இதனை உணரவிட்டால் தமிழ் பிரதேச அபிவிருத்திகள்,பட்டம்பெற்ற பட்டதாரிகள்,படித்த இளைஞர்,யுவதிகளின் வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்களை மாற்றுச்சமூகம் அனுபவிப்பதை தமிழ்மக்கள் பார்த்து கொட்டாவி விடக்கூடாது.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களை பெறுவோம் என பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது.அது ஒருநாளும் நடக்காது.வெற்றுக்கோசத்தையும்,உணர்ச்சி ஊட்டும் செயற்பாட்டை செய்யும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் போலி தாரக மந்திரங்களை தமிழ்மக்கள் உணர்ந்து விட்டார்கள்.மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதி கோட்டபாயவின் கரங்களை பலப்படுத்துவார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பு படுதோல்வியை சந்திக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அண்மையில் தனது தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசுகின்றபோது “ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பில் மொட்டுக்கு விழுந்த வாக்குகளில் 7000 சிங்கள மக்களின் வாக்குகள்” என்று பேசியிருந்தார்.இது முற்றுமுழுதாக  பொய்யான தகவலாகும்.வாக்குக்காக தமிழ்மக்களை மடையர்களாக்காமல் உண்மையான தரவுகளை வெளியிடும்படி கோரியிருக்கின்றேன்.இதுவரை சரியான தரவுகள் வெளியிடப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகையில் சிங்களவர்கள் 3982 பேர் உள்ளனர்.மொத்த சிங்களவர்களே 3982 ஆக இருக்கும்போது 7000 சிங்கள வாக்குகள் எப்படி வந்தது என்பதே எனது கேள்வி ஆகும்.எனவே குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் கோ.கருணாகரம்(ஜனா)ஆதாரத்துடன் தெரிவிக்கனும்.தமிழ்மக்களை உசுப்பேத்தி,உணர்ச்சி ஊசு போடும் அரசியல் விடயத்தில் தமிழ்மக்கள் விழிப்பாக இருந்து தக்கபாடம் புகட்டனும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த இரகசிய திட்டங்கள் ஏதாவது வைத்துள்ளதா? என்பதை தமிழ்மக்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.
மக்களை மீண்டும் மீண்டும் மடையர்களாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாசவை ஜனாதிபதி ஆக்குவதற்கு றிசாட் பதியுதீன்,ரவூப் ஹக்கீம்,சம்மந்தன்,சுமந்திரன்,மாவை சேனாதிராசா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எல்லோரும் இறங்கி வேலைசெய்து 120,000 வாக்குகளை பெற்றார்கள்.சஜித்தை ஜனாதிபதி ஆக்கும் முயற்ச்சியில் தமிழ்கூட்டமைப்பினர் “கோத்தாபாய ராஜபக்ஷவின்  வெள்ளைவேன் கடத்தல்” இடம்பெறுமென பொய்யுரைத்து வாக்குகளை பெற்றார்கள்.ஆனால் எங்கள் ஜனாதிபதி கோத்தபாய அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பொய்கள் பலிக்கவில்லை.தமிழ்மக்களை பற்றுதியுடன் உண்மையாக நேசிக்கும் எங்கள் ஜனாதிபதி.அவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றித்தருவார்.

இம்முறை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 66,000 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பெற்றுவார்கள்.ஏன்னென்றால் பொய்யான பரப்புரைகளை தமிழ்மக்கள் கற்று தெளிவடைந்துள்ளார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடம் தமிழ்மக்களை சுயகௌரவத்துடன் வாழவைக்கனும்,தமிழ் இனம் சார்ந்த தூரநோக்கு சிந்தனை,பொருளாதார திட்டங்கள், மாவட்டத்தில் உள்ள பெண்கள் தலைமைதாங்கும் 32486 குடும்பத்தை நிரந்தர பொருளாதார திட்டமிடலுடன் வாழவாழவைக்கும் இராஜதந்திர அரசியல்தலைமைத்துவம் இல்லாமல் செயற்படுகின்றார்கள்.தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன என்ற நிலையில் தற்போது தத்தமது சுயலாப அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.எனவே தமிழ்மக்கள் இப்பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமான மொட்டுக்கு வாக்களித்து அமைச்சர்களை பெற்று அபிவிருத்தியில் இருண்டுபோன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒளியேற்றுவதற்கு தயாராகுங்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ்மக்களை இன்னும் அதாள பாதாளத்துக்கு தள்ளிவிடும்.இது உண்மை.அவர்களின் 79 வருட அரசியலில் தமிழ்மக்கள் கண்ட பயன் என்ன? சாதித்த பயன் என்ன? ஒன்று மில்லை.கல்முனையை சம்பந்தன்,சுமந்திரன் தரமுயர்த்தினரா இல்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பு இவ்வாறான வேலையை செய்யமாட்டார்கள்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் இன்னும் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்.மட்டக்களப்பு மாவட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தால் இருள்சூழ்ந்து அபிவிருத்தியின்றி,காணப்படுகின்றது.மேலும் வேலைவாய்ப்பில்லாமலும்,மக்களின் அடிப்படைத்தேவைகள் இல்லாமலும்,ஓலைக்குடிசையில் தமிழ்மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள்.
பாமரமக்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் போலிவார்த்தைகளை உணர்ந்து விட்டார்கள் எனத்தெரிவித்தார்.

Related posts