மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்துறை சார்ந்த மூத்த கலைஞர் மூனாக்கானா என எல்லோரோலும் அறியப்பட்ட மு.கணபதிப்பிள்ளை காலமானார்

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்துறை சார்ந்த  மூத்த கலைஞர் மூனாக்கானா என எல்லோரோலும் அறியப்பட்ட மு.கணபதிப்பிள்ளை கடந்த சனிக்கிழமை(24)காலமானார்.

இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரையூர் கவின்கலை மன்றத்தின் தலைவராகவும், இந்துசமயக் கலாச்சார அமைச்சின் மதியுரைக்குருவாகவும் விளங்கியுள்ளார். இவரது “லெச்சுமி கலியாணம்”எனும் நாட்டுக்கூத்து கொழும்பிலும் பிற இடங்களிலும் பல தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது.  பாரம்பரியக் கலைகளான ஊஞ்சல் பாடல், காவியப் பாடல், காவடிப்பாடல், கொம்பு முறிப்பாடல், கிராமியக் கவிகள் முதலானவற்றில் மிகுந்த ஈடுபாடும் பாண்டித்தியமும் உள்ளவர்.

தாலாக்கோலம், புழுகுப்புராணம் முதலான தலைப்புகளில் தினகரனில் 1948 களில் வெளியான இவரது தொடர் கவிதைகள் இவரது சமூக அரசியல் பார்வையினையும் அதனை காஸ்யப்பண்போடு வெளிப்படுத்திய முறைமையும் இவரை ஒரு அசாதாரண கவிஞராக, கலைராக கலையுலகிற்கு அடையாளப்படுத்தியது. கலைமணி, கலைமாமணி, கலையரசு, மக்கள் கவிமணி, கலைஞாயிறு, கலைஞான வித்தகர், கலாபூசணம், ஆளுநர் விருது, தலைக்கோல் விருது போன்ற விருதுகள் இவரால் கௌரவம் பெற்றன.

Related posts