மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்வி பணிப்பாளரிடம் இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் பணிநீக்கம்

மட்டக்களப்பு பிள்ளாயாரடியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்விபணிப்பாளர் ஒருவரை தாக்கி அவரிடம் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிசாரை கடமையில் இருந்து இடைகால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருதாவது 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் பிள்ளையாரடி பகுதியில் வீதி சோதனை கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்துமாறு பணித்தனர்.

போகுவரத்து பொலிசாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றதையடுத்து பொலிசார் அவரை பின் தொடர்ந்து சத்திருக்கொண்டான் பகுதியில் வைத்து மடக்கிபிடித்த போது அவர் மதுபோதையில் இருப்பதை கண்டு அவரை தாக்கி அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக இரு போக்குவரத்து பொலிசார் பெற்றுள்ளனர் .

இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி கல்வி பணிப்பாளர் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்தி ஏற்படும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் இரு போக்குவரத்து பொலிசாரையும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக கடமையில்  இருந்து இடைகால பணிநீக்கம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 5 ம் திகதி கல்லடி பாலத்திற்கு அருகில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவரிடம் 7 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிசார் கைது செய்யப்பட்டு அவர்களை கடமையில் இருந்து இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts