மீட்கப்பட்ட ஆயுதங்களை பகுப்பாய்விற்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி!

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப கோரும் யாழ் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு நீதிவான் (செவ்வாய்கிழமை) அனுமதியளித்துள்ளார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) என்ற நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார்.

அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.

இதன்காரணமாக வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர்.

அங்குள்ள பொருட்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றினுள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.

பயன்படுத்த கூடிய ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர்  (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது “சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஏகே47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, மற்றும் 2 வோக்கிகள் என 4 பொருள்கள் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்படவேண்டும். அவற்றைத் தயாரித்த நாடு எது? உற்பத்தி ஆண்டு எது? உள்ளிட்ட தகவல்களை அறிவதன் ஊடாக அவை எங்கிருந்து சந்தேகநபருக்குக் கிடைத்தன என்பதை ஆராய முடியும்.

எனவே குறித்த நான்கு சான்றுப் பொருட்களையும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப மன்று அனுமதிக்கவேண்டும்” என பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த நீதிமன்றம், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts