மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டதில் இருவர் பலி

நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக உயிழந்த விஜிகரனின் சடலம் புதன்கிழமை மாலை  அடக்கம் செய்யப்பட்ட அதேவேளை, படுகாயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயனற்றுப்போன நிலையில் மரணித்த  வசந்தராஜின் சடலம் இன்று வியாழக்கிழமை மாவடிச்சேனையில் அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் தமது நண்பனின் தாயொருவர் மரணித்த செய்தி கேட்டு அம்மரண வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

இச்சம்பவத்திலே இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம்பற்றி சேருநுவர பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts