வெயில் நேரங்களில் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம் !

வெயில் நேரங்களில் விளையாட்டுத்துறை தொடர்பிலான விளையாட்டுக்களை இயன்றளவு தவிர்ந்துக் கொள்ளுமாறும், மாணவர்களை இந்நேரங்களில் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஒழிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஏனைய களியாட்டப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தும்போது, மாணவர்கள் முறையான நேரசூசியின் பிரகாரம் பங்குகொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிகோல வேண்டுமென, இந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். 

வரட்சியான காலநிலை காரணமாக, இத்தகைய திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டியுள்ளது. இல்லாவிடில், பிள்ளைகள் விபத்திற்குள்ளாகலாம். 

காலை நேரத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை, காலை 6 மணிக்கு ஆரம்பித்து, 8.30 மணிக்கு முடிக்க வேண்டும். மாலை நேரத்தில் 4 மணிக்கு பின்னர் போட்டிகளை நடத்துவது உசிதமானது.

ஓட்டப்போட்டிகளுக்கு முன்னரும், பின்னரும் மாணவர்களுக்குப் போதுமான அளவு நீரை, தவறாமல் பருக வைத்தல் வேண்டும். 

ஒரு மணித்தியாலப் போட்டியில் ஒரு லீற்றர் வரை மாணவர்களுக்கு நீர் ஆகாரம் வழங்குவது சிறந்தது. ஓட்டப் போட்டிக்கு மத்தியில் நீருக்கு பதிலாக இளநீர், ஜீவனீ போன்ற பானங்களைப் பருக வைப்பது மிகவும் நல்லது என்றும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts