ஹக்கீம், ஹரீஸ் விட்ட தவறை கோத்தாவும், மஹிந்தவும் சரிசெய்ய வேண்டும் : கல்முனை மக்கள் !!

(சாய்ந்தமருது நிருபர்-நூருல் ஹுதா உமர் )
 
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக எல்லையில் அமைந்துள்ள கல்முனை மாநகர சபை ஆட்சிக்கு உட்பட்ட கல்முனை பொதுச்சந்தை வழமை போன்று இந்த ஆண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. முஸ்லிங்களின் தலைநகரம்,முகவெற்றிலை என்றெல்லாம் சிறப்புப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த புராதான நகரமானது அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட நகரம் போன்று காட்சியளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
கிழக்கு மாகாணத்தின் நாலா திசைகளிலிருந்தும் ஒருநாளைக்கு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம், தமிழ், சிங்கள, வர்த்தகர்களும், நுகர்வோரும் பயன்படுத்தும் இச்சந்தை கட்டிடம் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இலங்கையில் காணப்படும் மிகப்பழமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றைபோன்று காணப்படும் இச்சந்தை கட்டிடம் மிகப்பலமாக காற்றுவீசினால் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளத்துடன் இங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதும்,பொருட்களை கொள்வனவு செய்வதும் மிகவும் பயத்துடனையே என கருத்து தெரிவிக்கும் மக்கள் பிரதேச அரசியல்வாதிகளை குற்றம் குமத்துகின்றனர். 
 
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தும் , மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் வர்த்தக அமைச்சராக இருந்தும் இந்த சந்தைக்கு எந்தவித ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்க வில்லை என்பதுடன் பல மாநகர முதல்வர்கள் அதிகார கதிரையை அலங்கரித்தும் இதுசம்பந்தமாக பல கூட்டங்கள், கருத்தாடல்கள்,கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் பல தசாப்தங்களாக ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் எதுவும் நடைபெறவில்லை. 
 
குறித்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கல்முனை மாநகர சபை முதல்வராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக பல வருடங்கள் இருந்தும் அவருடைய அரசியலுக்கும் வாக்கு சேகரிக்கவும் மட்டுமே இந்த சந்தை பயன்படுத்தப்படுவதாகவும் அவரது அரசியல் அதிகார காலங்களில் இந்த சந்தையை புதிதாக நிர்மாணிக்க முடியாமல் போனதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 
 
சிறுமழை பெய்தாலும் பாரிய வெள்ளம் காணப்படும் இச்சந்தையை உடனடியாக மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க நாட்டின் வினைத்திறன் கொண்ட புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிடமும் கோரிக்கை முன்வைக்கின்றனர். 

Related posts