மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிப்பு

மட்டக்களப்பு தமிழரசு கட்சியினால் இன்று திங்கட்கிழமை(18)மதியம் நடத்தப்படவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று மதியம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு கொள்ளும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட வேளையில் இவ் தடை உத்தரவு நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவில் தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியினுடைய பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மேலும் இவ் நீதிமன்ற உத்தவினை மதித்து நினைவேந்தல் நிகழ்வினை நடத்தவில்லை என்றும், இதனை நடத்துவதன் மூலம் நாங்கள் கைது செய்யப்படுவதோ பின்னர் பிணையில் விடுவிக்கப்படுவதோ குறித்து கவலையடையவில்லை என்றும், தொற்று நோய் பரவலுக்கு தமது கட்சி நிகழ்வு காரணமாகிவிடக் கூடாது என்னும் நோக்குடனேயே இந்த நிகழ்வினை நடத்துவதில் இருந்து பின்வாங்குகிறோம் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், த.அ.க பாராளுன்ற தேர்தல் வேட்பாளர்களான மா.உதயகுமார், இரா.சாணக்கியன், வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் சமூகம் தந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts