ஏறாவூரில் கதிர்காம பயணிகள் பஸ்சுடன் டிப்பர் மோதியதில் விபத்து !!

மட்டக்களப்பு ,ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காம யாத்திரீகர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த தனியார் சிறிய ரக பேருந்து ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு சம்பவித்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த பேருந்தின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கதிர்காமத்திற்கு சென்றிருந்த யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்தாறுமூலை நோக்கி பயணம் மேற்கொண்ட பேருந்தின் மீது, எதிர்த் திசையில் மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இதனால் பேருந்தின் ஒருபக்க கண்ணாடிகள் முழுமையாக சேதமடைந்ததோடு, சாரதிக்கு கண்ணாடி துண்டுகள் சிதறி காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டிப்பர் ரக வாகனத்தைச் செலுத்திச் வந்த சாரதி மது போதையுடன் காணப்பட்டார் என்பதை அவரது தடுமாற்றத்தை வைத்து ஊகிக்கக் கூடியதாக இருந்ததாக யாத்திரீகர்களும் விபத்த நடந்தவுடன் உதவிக்கு விரைந்தோரும் தெரிவித்துள்ளனர்.

Related posts