இலங்கையில் வலுவடைந்துள்ள டொனாடோ காற்று : மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசக்கூடுமென்று திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த காற்று டொனாடோ என்ற காற்றாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டபோதிலும், அது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டவண்ணமுள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

கரையோரப் பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts