துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு இன்று ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க  மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு 15.06.2019 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகின்றது

தித்திக்கும் தமிழ் கொடுத்து தெவிட்டாத சுவையூட்டி  எத்திக்கும் புகழ் சேர்க்கும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் பெரியநீலாவணைக்கு மேற்குப் புற எல்லையில் மட்டக்களப்பு வாவிக்கரையினை அண்டியதாக அமைந்திருக்கும் பூர்வீகக் கிராமமாக விளங்கும் துறைநீலாவணைக் கிராமத்தின் கிழக்குப்புறமாக வயல் நிலம் சூழ நான்குபுறமும் நீர்சூழ்ந்த குளத்தின் அருகே அம்மன் ஆலயம் அருள்பாலித்து இருக்கும் முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு 15.06.2019 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமாகிறது.

 முத்துமாரியம்மன்  ஆலயமானது மிகவும் பழமைவாய்ந்ததாக இருப்பதுடன் இவ்ஆலயத்திற்கு அருகில் சுமார் 3 நூற்றாண்டு பழமைவாய்ந்த அம்பாரைப்பிள்ளையார் ஆலயம் இருக்கிது இந்த ஆலயத்தில் இருக்கும் பிள்ளையார் ஆரம்பகாலத்தில் துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்களால்; மட்டக்களப்பு வாவியில் இருந்து கண்டெடுத்ததாகவும் அப்போது அதனை கொண்டு குளத்தருகில் சிறிய கொத்துப்பந்தலில் வைத்து வழிபட்டு வந்ததாக தெரியவருகிறது அதன் அருகில் அக்கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் புகையிலைத்தோட்டம்செய்து வந்தபோது அப்பகுதியில் அம்மனுடைய அடையாளம் கண்டெடுத்ததாகவும் அதனால் அவ்விடத்தில் புகையிலைத்தோட்டம்செய்வதை நிறுத்திவிட்டு அம்மனுக்கு ஆலயம் அமைத்து நவராத்திரிகாலத்தில் சடங்குசெய்து வந்ததாகவும் பின்னர் அத்தினம் மாற்றப்பட்டு ஆனிப் பூரணையில் தொடர்ச்சியாக உற்சவம் நடைபெற்று வருகிறது

இந்த ஆலயத்தில் எவ்வித மரபுவழியும் பேணப்படுவதில்லை கிராமத்தில் இருக்கின்ற அனைத்து குடிமக்களுக்கும் இவ்ஆலயத்தில் முக்கியத்துவம்  வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ் ஆலய உற்சவத்தில் ஊர்வலம் கன்னிக்கால்வெட்டல் மடிப்பிச்சை எடுத்தல் தீமிதித்தல் காத்தானை கழுவில்வைத்தல் விநாசகப்பானை தவநிலை சமுத்திரநீராடல் தீமூட்டல்  வட்டுக்குத்துதல் போன்ற விசேடநிகழ்வுகள் இடம்பெறுகிறன .

அம்மனுடைய உருவச் சிலையினை சுமந்து செல்பவரை அம்மாள் என்ற பெயரால் அழைப்பார்கள் ஆரம்பகாலத்தில் அமரர்களான மு.பிள்ளையான்தம்பி மற்றும் ஆறுமுகம் போன்ற அடியார்கள் அம்மனுடைய உருவச்சலையினை சுமந்து சென்றனர் தற்போது அருச்சுணன் என்பவரே அம்மனது உருவச்சிலையினைச் சுமந்துசெல்லுகின்றார்.

ஆலய உற்சவம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு விசேடபூசைகள் ஆரம்பமாகும்  17 ஆம் திகதி திங்கட்கிழமை அம்மன் ஊர்வலம் இடம்பெறும் அதாவது அம்மன் அடியாரான அருச்சுணனால் அம்மனுடைய உருவச்சிலையை தாங்கிக்கொண்டு சப்புறத்தில் சோடனை செய்தும் அம்மன் ஊர்வலம் காளிகோவில் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம் சக்திவிநாயகர்ஆலயம் கண்ணகியம்மன்ஆலயம்  ஸ்ரீ முருகன் ஆலயங்களுக்குச் சென்றுவரும் மறுநாள் 18 ஆம்   திகதி செவ்வாய்க்கிழமை துறைநீலாவணையில் இருந்து குடிபெயர்ந்து வாழும் உறவுகளான துரைவந்தியமேட்டுக்கிராமத்திற்கு அம்மன் ஊர்வலம் எடுத்துச்செல்லப்படும்  19  ஆம் திகதி புதன்கிழமை அம்மன் கன்னிக்கால்வெட்டும் நிகம்வு இடம்பெறும்  அதாவது ஊர்வலம் செல்லும் தினங்களில் அம்மன் அடியார்களால் கன்னிக்கால்வெட்டும் இடம் இனங்காணப்பட்டு  அந்த இடத்திலே கன்னிக்கால் வெட்டப்படும் அது பூவரசு மரத்திலே கன்னிக்கால் வெட்டப்பட்டு அதனை சுமந்துவந்து அன்றிரவு கல்யாணப்பந்தல் சோடனைசெய்து அம்மனுக்குத் கல்யாணச்சடங்கு சிறப்பாக இடம்பெற்று வருவது வழமையாக இருக்கிறது.

20 ஆம் திகதி மாலை அம்மன் சமுத்திரநீராடலுக்காக அம்பாரைமாவட்டத்தின் எல்லையில் உள்ள பெரியநீலாவணைக் கிராமத்திற்குச் சென்று பெரியநீலாவணையில் உள்ள விஷ்ணு ஆலயம் பேச்சம்மன் ஆலயம் பெரியதம்பிரான் ஆலயங்களுக்குச் சென்று விஷேட பூசைகள் நடாத்தப்பட்டு பின்னர் கடலுக்குச்சென்று விசேடபூசைசெய்து  அம்மன் தெய்வங்களுக்கு சாட்டையடி வழங்கி நீராடி அன்றிரவு நோப்புநூல் கட்டப்பட்டு 21 ஆம் திகதி அதிகாலை வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் இடம்பெறும் 

அதனைத்தொடர்ந்து 21 ஆம்திகதி வெள்ளிக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான பொங்கல்பானைகள் ஆலயத்தைச்சூழவுள்ள பகுதிகளில் பொங்கல் இடம்பெறுவதுடன் விநாயகப்பானையும் ஆலையத்திற்கு முன்முகப்பில் பொங்கப்பட்டு விசேடபூசைகள் நடாத்தப்படும். 

அன்றைய நாள் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அருகில் இருக்கும் அம்பாரைப்பிள்ளையார் ஆலயத்தில் அம்மாளுக்கு அமர்ந்திருப்பார்கள் பின்னர் அவர்கள் மாரியம்மன்ஆலயத்திற்கு வெள்ளைத் துணியினால் அவர்களை போர்வை செய்து அழைத்துச்செல்லப்பட்டு விசேடபூசைகள் நடாத்தப்படும். 

நேர்த்தியின் பொருட்டு பெண்கள் கிராமத்திலுள்ள வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுத்து அதனை ஆலயத்தில் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்  ஆலயத்தின் பூசைகளை சிவசிறி கு.நல்லராசா குருக்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

Related posts