இலங்கை எனும் ஒரே நாட்டில் ஒரே சட்டம் மட்டுமே இருக்க வேண்டும் !!

-அபூ ஹின்ஸ்-
 
ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம். எனும் இலக்கை கொண்டு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இருந்த  சிரேஷ்ட சட்டத்தரணி நாக நந்த  கொடிதுவக்கு அவர்களுக்கு பயந்து அவர் போட்டியிட இருந்த கட்சியை குழப்பி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்து விட்டார்கள் என சிரேஷ்ட சட்டத்தரணி நாகநந்த கொடிதுவக்கு அவர்களின் புதிய அரசியலமைப்பை மக்கள் மயப்படுத்தும் அமைப்பினுடைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜே சரிப் தெரிவித்தார்
 
இன்று மாலை மாளிகைக்காடு தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்ற இலங்கை குடியரசின் மக்கள் அங்கீகரித்த அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தும்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
 
கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் பக்கத்து வீதியில் இருக்கின்ற மாணவர்களையே சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பாடசாலை கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் வாகனங்களில் சாரதிகளும் வாகன நடத்துநர்களும் சீருடை அணிய வேண்டிய சட்டத்தை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.
 
எந்த அரசியல்வாதியும் செல்கின்ற சொல்லை செயலில் காட்டுவதில்லை. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஊழல் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். 
 
ஒரே நாட்டில் , ஒரே இனமாக , ஒரே சட்டத்தின் கீழ் இலங்கையர்கலாக நாங்கள் வாழ வேண்டும். முஸ்லிம்களுடைய தலாக் சட்டங்கள் எதுவும் இந்த நாட்டில் எழுத்து மூலம் நடைபெறுவதில்லை வாய்மொழி மூலமே இடம்பெற்று வருகின்றது ஆகவே சகல இனத்தவர்களும் ஒருமைப்பாட்டோடு  இலங்கையர்கள்  வாழ தனிநபர் சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும் இஸ்லாமிய சட்டம் , தேசவழமைச் சட்டம் , கண்டிச் சட்டம் என்பதோடு எல்லா தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கி ஒரே நாட்டில் ஒரே சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
 
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு செலவினங்களை குறைக்கும் முகமாக அமைச்சரவையின் தலைவராக உள்ள பிரதமர் அவர்களே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக கொண்டு புதிய சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும். சிறியதொரு நாடான இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்ற ஒன்றாகும் என்றார்.

Related posts