இலங்கை வரும் மோடியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தும் விடயம் என்ன?

நீண்டகாலமாக இழுபட்டுவரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவை எட்டுவது தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி குறுகிய நேரப் பயணமாக உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார். மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிலையில் நாளை வரும் பிரதமர் மோடியுடன் நீண்டகாலமாகவே இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பாக இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவருகின்ற தாக்குதல்கள் அடக்குமுறைகள்தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வினை எட்டுவதன் மூலம் தான் இந்த நாட்டில் சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்கமுடியும் என்ற விடையத்தினை நாம் சுட்டிக்காட்டுவோம்.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டநிலையில் தற்போது அவை கைவிடப்பட்டதாகவே உள்ளன. இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலேயே எமது பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறும் என தெரிவித்தார்.

Related posts