கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற தூயநோக்குடன் த.தே.கூட்டமைப்பு செயற்படுகின்றது

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற தூயநோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படும் போது கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் சகல அதிகாரங்களுடன் இருந்த பிரதியமைச்சர், கிழக்கு முதலமைச்சர் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிரான்குளம் 10ஆம் வட்டார பகுதியில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு வீதிகள் மற்றும் இரண்டு ஆலயங்களுக்கு கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 53 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து கிரான்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பௌத்த தேர்தரர்கள் திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.
இந்த அரசாங்கம் வீழ்த்தப்படுமாக இருந்தால் புதிதாக வருகின்ற அரசாங்கம் எந்தளவிற்கு எங்களுக்கு சாதகமாக இருக்கும் அல்லது உதவிகளை செய்யும் அல்லது எந்தளவிற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஒப்பீட்டு ரீதியாக பார்க்க வேண்டும்.

இருப்பதை உடைத்துவிட்டு இன்னுமொன்று எங்களுக்கு மோசமானதாக இருந்தால் அதனைப் பார்த்து நாங்கள் மனவேதனைப்படுவதில் அர்த்தமில்லை. எனவே அரசியல் சாசனம் என்ற செயற்பாடு இப்போதிருக்கின்ற அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதனை குழப்பியடித்தவர்கள் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். அதற்காக நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முழு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளிலும் குறைபாடுகள் இருக்கின்றன.

தற்போது பெரும் பேசுபொருளாக இருக்கின்ற விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றிய ஒரு தர்க்கம். இது சாதாரணமான ஒரு சிறிய விடயம் என்று நோக்கப்பட்டாலும் கூட அங்கிருக்கின்ற பல்வேறுபட்ட கட்சிகளும் தலைமைகளும் போட்டித்தன்மையான அரசியல் என்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் தற்போதிருக்கின்ற அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கமாக பார்க்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகள் இருக்கின்ற போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக செயற்பட்டது. இப்போது அதன் நிலை ஒரு தொங்கு பாராளுமன்றமாகும். இந்த நிலையில் அவர்களிடமிருந்து நாங்கள் சில விடயங்களை பெற்றுக்கொள்வதென்பது கடினமாக இருக்கின்றது.

Related posts