கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் 915பேர். திருமலையில் திடீர் அதிகரிப்பு: ஆளுநர் அறிவித்தல்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக கூடியுள்ளது. அங்கு  915 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.
 
கிழக்கில் கடந்த 24மணித்தியாலங்களில் 51பேர் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கூடிய 22 பேர் கல்முனை தெற்கிலும் அடுத்ததாக 10பேர் பொத்துவிலிலும் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதுவரை சம்மாந்துறை ஒலுவில் மற்றும் சாய்ந்தமருதில் 3 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
திருமலையில்…
திருமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக 20க்குள்  இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று திடீரென 94ஆக உயர்ந்துள்ளது.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவசர அவசரமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றை நடாத்தி முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
 
முக்கியமாக திருகோணமலைக்குள் யாரும் அநாவசியமாக பிரவேசிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனைய நடவடிக்கைகளை இறுக்கமாகப்பேண உத்தரவிடப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
 
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 110பேரும் கல்முனை பிராந்தியத்தில் 665பேரும் திருமலை மாவட்டத்தில் 94பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 23பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
தனிப் பிரிவுகள் ரீதியாக….
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 23பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 665பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 624பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
 
தனியாகப்பார்க்குமிடத்து  அக்கரைப்பற்றில் மட்டும் 303பேரும் அடுத்ததாக கல்முனை தெற்கில் 110 பேரும் அட்டாளைச்சேனையில் 63பேரும் கோறளைப்பற்று மத்திபிரிவில்  தொற்றுக்கள் 63பேரும் திருமலையில் 52பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
அடுத்தபடியாக  பொத்துவிலில் 50பேரும் சாய்ந்தமருதில் 32பேரும்  ஆலையடிவேம்பில் 24பேரும் இறக்காமத்தில் 23பேரும் மூதூரில் 21பேரும் திருக்கோவிலில் 14 பேரும் சம்மாந்துறையில் 14பேரும் கல்முனை வடக்கிலும் களுவாஞ்சிகுடியிலும் தலா 11பேரும் நிந்தவுரில் 10பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
சிகிச்சை நிலையங்களில் 2210 அனுமதி
 
கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 527கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (24.12.2020) வியாழக்கிழமை  வரை 2210பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1672பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 39கட்டில்கள் எஞ்சியுள்ளன.
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 755பேர் அனுமதிக்கப்பட்டு 589பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 162பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 42 கட்டில் தேவையாகவுள்ளன.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 80 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 72 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  28பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 86 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 99 பேரும்சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
29991பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில்     29991பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 14962 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 136781 சோதனைகளும் மட்டக்களப்பில் 7438 சோதனைகளும் அம்பாறையில் 2543 சோதனைகளும் திருகோணமலையில் 3229சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts