நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடனான காலநிலை நிலவி வருவதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(எம்.ஏ.றமீஸ்)
வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடனான காலநிலை நிலவி வருவதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள்  பல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ஆம்பாறை மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வந்த பெருந்தொகையான பொதுமக்களின் குடியிருப்புக்களில் மழை நீர் புகுந்தமையால் அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதோடு, குறிப்பிட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பகுதியில் 36.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது. மகாஓயா பிரதேசத்தில் 25.5 மிலிலி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 24.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இங்கினியாகல பகுதியில் 22.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், லகுகல பகுதியில் 19.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பிரதேசத்தில் 19.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களத்தின்  அம்பாறை மாவட்ட அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.
இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்கின்றபோது பலத்த காற்றும் இப்பிராந்தியத்தில் வீசி வருகின்றது. 
கடற் பிராந்தியத்தில் சில வேளைகளில் பலத்த காற்று வீசி வருவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்தும் வருகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் கடல் அலை சுமார் பத்து அடிக்கு மேல் எழுவதாகவும் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில விவசாய நிலங்கள், குடிசைக் கைத்தொழில்கள் போன்றன வெகுவாக பாதிப்படைந்துள்ளன. மீன்பிடி நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதால் இம்மாவட்டத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதோடு மீன்களின் விலை அதிகரித்தும் காணப்படுகின்றது.

Related posts