பிரிவினையை ஏற்படுத்தும் காரணிகளுக்குள் சிக்கக்கூடாது: சம்பந்தன்

சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்குள் சிக்கிவிடக் கூடாதென்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய வருடத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில் இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டுவர பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நிகழ்ந்த சாதக, பாதக நிகழ்வுகள் யாவும் படிப்பினைகளை வழங்கியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இந்த படிப்பினைகளைக் கொண்டு வாழ்வினை வளப்படுத்திக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த புதிய வருடத்தில் அடையவேண்டுமென பிரார்த்திப்பதாக கூட்டமைப்பின் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அத்தோடு, நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கமுடியாத, பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அடைந்திட முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts