புல்லுமலை போத்தல் நீர் தொழிற்சாலைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை, கும்புறுவெளி மக்களின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை  மனிதஉரிமைஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிடம் அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ஏம்.முத்துலிங்கம் மற்றும் செயலாளர் க.நாகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த முறைப்பாட்டினைச் சமர்ப்பித்துள்ளனர். இதன்போது இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் த.சிறிபாலுவும் இணைந்திருந்தார்.

இவ் அமைப்பினால் கையளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின்  கிழக்குமாகாணத்தின்  மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலை, கும்புறுவெளி பிரதேசத்தில் பல ஏக்கர் காணிகளில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரியளவிலான தொழில்சாலை ஒன்றினை ரொமேன்சியா லங்கா பிறேவெற் லிமிடட் தனியார்  கம்பனியானது ஆரம்பிக்கவுள்ளது. இதனை கடந்த 10.06.2018 கம்பனியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும்  உறுதிப்படுத்துகின்றது.

மேற்படி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலை பகுதியானது கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் முற்றுமுழுதாகப்  பாதிக்கப்பட்ட மிகவும் வறுமையிலும்  வறுமையான மக்கள்  வாழும் கிராமமாகும்.

இக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடானது காலாகாலமாக இருந்து வருவதுடன். மழை நீரை நம்பியும், அங்குள்ள குளங்களையும் நம்பியே மக்கள் தங்களது  ஜீவனோபாயத்தினை மேற்கொள்கின்றார்கள்.

மேற்படி நீர்பற்றாக்குறை காணப்படும் உரியபகுதிகளில்  180 – 200 மீற்றர் ஆழம் வரையான குழாய் கிணறு அடித்து நிலக்கீழ் நீர், குளங்கள் மற்றும்  உன்னிச்சை நீர்பாசனத் திட்டம் ஆகியவற்றில் நீரைப் பெற்று அதனை போத்தலில் அடைத்து விற்பதற்கான தொழில்சாலையாகவே இது அமையவிருக்கின்றது.

இத்தொழில்சாலை அமைப்பதற்காக 22  இற்கு மேற்பட்ட அரச மற்றும்  அரசசார்பற்ற திணைக்களங்கள், நிறுவனங்களின் பகுப்பாய்வகளின் அடிப்படையில் அரச கட்டமைப்பு திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளிடம் அனுமதிபெற்று இத் தொழில்சாலை அமைக்கபட்டு வருவதாக உரிய கம்பனியின்  ஊடக அறிக்கை குறிப்பிடுகின்றது.

ஆனால் மேற்படி 22 மேற்பட்ட ஆய்வுகளும்  நடைபெற்ற போதும் உரிய பிரதேச மக்களுக்கு  இவை தெளிவுபடுத்தப்படவும் இல்லை, மக்களிடம் ஆலோசனைகளும் கேட்கப்படவும் இல்லை, அதேவேளை உரிய பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசப்படவும் இல்லை,தொழில்சாலை அமைப்பதற்கான அனுமதிகளும் வழங்கப்படவும் இல்லை.

இருந்தபோதும் திட்டமிட்ட வகையில்  உரிய அரச திணைக்களங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி உரிய கம்பனியானது அனுமதிகளைப் பெற்று இருக்கின்றது. இது முற்றிலும் ஓர் மனித உரிமை மீறலாகும்.

எனவே மக்களின் விருப்பம் இல்லாமலும்,எமது அடிப்படை உரிமையான உணவினை கேள்விக் குறியாக்கும் மேற்படி தொழில்சாலை அமையப் பெறுமாகவிருந்தால்  கிராமமக்கள் மாத்திரம் இன்றி மட்டக்களப்பு மாவட்டமே கீழ் குறிப்பிடப்படும் பாதிப்பிற்குட்படுத்தப்படுவோம் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்

1. புல்லுமலை பிரதேசமானது கடல் மட்டத்திலிருந்து 125 மீற்றர் உயரமானது,ஆனால் இப்பகுதிகளில் 180-200 மீற்றர் ஆழத்தில் குழாய் கிணறு அடித்து தண்ணீர் உறிஞ்சப்படுமாக விருந்தால் அனேகமான குடியிருப்பு மற்றும் வயல் நிலங்கள் உவர்த்தன்மையாக காணப்படுவதால் விவசாயம் முற்றாக பாதிக்கப்படும்.

2. குளங்கள் மற்றும் நிலத்தடி நீரை நம்பி வாழும் விவசாயங்கள், மீன்பிடிகள்,பயிர்கள், மிருகங்கள் பெரும் மரங்கள், காடுகள் என்பன அழிவடையும் இதனால் மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்து மேலும் வறுமைக்குட்படுவார்கள்.

3. புதிய வகையான நோய்கள் ஏற்படுவதுடன், இறப்புக்களும் அதிகரிக்கும்.

4. குளங்கள், பாவனைக் கிணறுகளில் நீர் வற்றிப் போவதுடன், குடிநீர் தட்டுபாடு மேலும் அதிகரிக்கும்.

5. இதன் மூலம் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோhர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே  இலங்கையில்  சுயாதீனமாக இயங்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது  இத் தொழில்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள்  மற்றும் அதிகார சபைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை இதனை உடன் நிறுத்தி மக்களின் உயிர் வாழும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு வேண்டுவதுடன், உரிய கம்பனிக்கு எதிராக முறைப்பாடுகளையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts