வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களியுங்கள்… -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி செயல்முறையுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒன்றிணைந்து செயற்படும் புது யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
அந்த புது யுகத்தை உருவாக்குவதற்கு மொட்டு சின்னக் கட்சியை பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறச் செய்யுமாறு  (2020.07.07) முற்பகல் ஹிரியால தொகுதியில் குருநாகல் குளத்துவட்ட வீதியில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
சிலர் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல்வேறு விதத்தில் எதிர்ப்புகளை வெளியிட்டாலும், அவ்வாறானவர்களிடமிருந்து பாதுகாப்பாக ஒதுங்கி இதுவரை வெற்றிகரமாக மேற்கொண்ட அபிவிருத்திகளையும் மற்றும் எதிர்காலத்தில் வெற்றிபெற வேண்டிய அபிவிருத்திகளையும் நோக்கி நாட்டை கொண்டு செல்வதே தனதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் எதிர்பார்ப்பாகியுள்ளது.
 
பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல், சுகாதார பிரச்சினைகளை தீர்த்து வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை அபிவிருத்தி, விவசாய நடவடிக்கை மற்றும் குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு புதிய நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல இதுவரையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அத்திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
இந்நாட்டின் சுற்றுலா துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், அதன் கீழ் குருநாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களை சுற்றுலா நகரங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
 
குறித்த சந்திப்பின்போது குருநாகல் மாவட்ட குழுத் தலைவர் ஜொன்ஸ்ரன் பர்னாந்து, ஜயரத்ன ஹேரத், மஞ்சுளா குமாரி திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts