உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில்  கைதான 14 பேரையும் மீண்டும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை(2)   எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர்கள் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி  பல  மாதங்களிற்கு மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட   சந்தேக நபர்கள்   தொடர்பான விசாரணைகள் யாவும்   இன்று   மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதனடிப்படையில்  தொடர்ச்சியாக  கடந்த காலங்களில்   தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில  சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராயப்பட்ட நிலையில் கடந்த தவணையில்  சில  வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க கல்முனை  நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போதுள்ள   சந்தேகநபர்கள்   14 பேருக்கும்  மீண்டும்  விளக்கமறியல் நீடிக்கப்பட்டு  இவ்வழக்கு விசாரணை   அடுத்த வழக்கு தவணையை  எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts