தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், மார்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு முன்பாக, வவுனியாவில் இருந்து வந்த சில உறவினர்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.
மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “காணாமற்போனோர் குறித்து அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயங்குகிறீர்கள்?”, “உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்”, “ஏன் போர்க் குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Related posts